“பத்து மணிக்கு எழுந்திரிக்கிறா, ஞாயிற்றுக்கிழமைனா என்னா? ரெஸ்ட் வேணுங்கிறதுக்காக பத்து மணிக்கா எழுந்திரிக்கிறது?” லட்சுமியம்மா எரிச்சலோடு சொல்கின்ற வார்த்தைகளுக்கு “உம்” கொட்டிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு பாக்கியம்.
“ஏண்டா, ஆம்புள புள்ள, நீ போயாடா சமையல் கட்டுல நிப்ப? உம் பொண்டாட்டிய ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு இப்படி நீ அடுப்புல வேகனுங்கற அவசியம் என்னடா கிடக்கு?” லட்சுமியம்மா கோபத்தோடு பேசிய வார்த்தைகளைக் காதில் கேளாதவனாய் சமையலறையில் சுழன்றுக் கொண்டிருந்தான் மோகன்.
மருமகள் படுத்திருக்கும் அறையை அணலோடும் கணலோடும் பார்த்துவிட்டு, சமையலறையில் பேதையாய் சமையலைச் செய்துக் கொண்டிருந்த மகனை விரக்தியோடு பார்த்தார் லட்சுமியம்மா.
வாய்க்குள் எதையோ முனகியவாறே, அந்த மேசை மேல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆரஞ்சு பழம் ஒன்றையும் கொஞ்சம் கைக்கொள்ளும் அளவு திராட்சைப்
பழங்களையும் அள்ளிக் கொண்டு நடந்தார் லட்சுமியம்மா. மகன் வீட்டிலிருந்து அடுத்த வரிசை வீடுகளில் ஒன்றான மகள் வீட்டுக்குள் உத்வேகத்தோடு காலடி எடுத்து வைத்தார்.
“பாட்டி” என ஓடோடி வந்த பேத்தியைத் தூக்குவதற்கு முன், “இந்தாடி செல்லம்....எல்லாம் உனக்குத்தா” என்று கையிலிருந்தப் பழங்களைப் பேத்தியின் கரங்களுக்குள் புகுத்தினார் லட்சுமியம்மா. “அம்மா எங்கடா காணோம், கோயிலுக்கு போயிட்டாங்களா?” என்றார்.
“ஐயோ பாட்டி இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, அம்மாக்கு ரெஸ்ட் day, அப்பாத்தான் எல்லா வேலையும் செய்யனும்....அம்மா எழுந்திருக்க 12 மணி ஆகும். ம்ம்ம்ம்ம்... இன்னைக்குக்கு சிக்கன் கறி....அப்பா ஸ்பெஷல்….”
படுக்கையறையில் ஆழ்ந்து உறங்க்கிக் கொண்டிருந்த மகளைப் பாவமாய் பாசமாய் எட்டிப் பார்த்து விட்டு, சமையல் அறையில் பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருந்த மருமகனைப் பெருமிதத்தோடு பார்த்தார் லட்சுமியம்மா.
- Shathiyah Kristian